Friday, September 30, 2011

How to give First AID ?


அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே .............

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும்
எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு
முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை
செய்ய வேண்டும்.

மாரடைப்பு:

மாரடைப்பிற்கான அறிகுறிகள்:

நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின்
நடுவே தோன்றுதல்.

இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான
வலி ஏற்படுதல்.

த்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.

படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல்.
காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய
சோர்வு.

முதல் உதவி சிகிச்சை:

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வர வழையுங்கள்.

ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள்.
நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.


பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க
ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி
மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு
நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள்
வாயைப் பொருத்திக் கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி
அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று
பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை
சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி
தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி:
சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே
மூலம் குணப்படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு
உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்து போனால் உடனடியாக டாக்டரிடம்
அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்:

சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை
அப்புறப்படுத்தி விட்டு ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின் மீது போடலாம்.

காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணி கொண்டு
கட்டுப் போடுங்கள்.


வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும்
ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பு:
கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள்
முயற்சி செய்யவேண்டாம்.

எலும்பு முறிவு:

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது
கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லா விட்டால்,
நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால்,
உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும்
வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கைவிரல் அல்லது
கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால்
மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.


எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில்
தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி
வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ்
உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.


டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த
நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.